July 27, 2015

இந்த நூற்றாண்டு நாயகன் திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி

திரு.அப்துல்கலாம் அவர்களின் இழப்பு நம் நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு. இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவன் திரு. அப்துல்கலாம் அவர்களை இழந்துவிட்ட நம் அனைவரது வருத்தம் ஈடுசெய்யமுடியாதது.
அனைவராலும் நேசிக்கப்ப(ட்ட)டும் அற்புத மனிதர். கலாமைச் சுமந்ததினால் பூமகளையும் பூரிப்படையச் செய்த தலைவன். உலகமே பிரமிப்புடன் கண்டுவியக்க இளைஞர்களை அற்புத சிற்பமாய் செதுக்கும் உளியாக இருந்த தலைவன். தன் அக்கினிச்சிறகினால் மனத்தோட்டத்தில் நம்பிக்கை விதைகளை விதைத்த அற்புதன்.
தென்கோடியில் பிறந்து வடகோடியில் உயிர்த்துறந்து வடக்கிலிருந்து தெற்குநோக்கி இறுதிபயணம் மேற்கொள்ளும் இந்தத்தலைவனைப்போல் இதுவரைக் கண்டதில்லை இந்த நூற்றாண்டு.
இயற்கைக்கு சவாலாய் அனைவருக்கும் பிடித்தவராய் அனைத்து மதத்தினரும் போற்றும் நல்லதொரு நாயகனாய் விளங்கி, இன்னல்களைக் கடந்தும் நெறிதவறாது வாழ்ந்துகாட்டிய அவர் வழி பயணிக்கும் இளைஞர்களின் உருவத்தில் நாம் நம் கலாம் அவர்களை மீண்டும் காணலாம் என்ற எதிர்பார்ப்போடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு மன பலத்தையும், எதிர்கால இந்தியா இளைஞர்களிடத்தில் என்றவரின் கூற்றை நினைவாக்கும் விதத்தில் எண்ணற்ற கலாம்களை எதிர்நோக்கியபடியே மனம்முழுவதும் துயரம் தாங்கி அவருக்கு நீங்கா விடையளித்து அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம். frown emoticon frown emoticon __/|\__
துயரத்துடன் தமிழ்க்குடில் குடும்பம்

July 22, 2015

மறைமலை அடிகளார் பிறந்ததின சொற்பொழிவு போட்டி


அன்புத் தோழமைகளுக்கு வணக்கம்.

உயர்திரு மறைமலை அடிகளாரின் பிறந்ததினத்தை(15 ஜூலை) முன்னிட்டு ., அவரின் தமிழ்த்தொண்டை நினைவுகூரும் வகையில் தமிழ்க்குடில் அறக்கட்டளை மாறுபட்ட போட்டி நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தது தாங்கள் அறிந்ததே.  

போட்டி விவரங்கள்.

போட்டி - சொற்பொழிவு.

தலைப்பு  - ”மறைமலை அடிகளாரும் அவரின் தமிழ்த்தொண்டும்”

விதிமுறை - மேலேகுறிப்பிட்ட தலைப்பில் சொற்பொழிவுக்கான கருத்து தயார் செய்து அவரவர் குரலில் சொற்பொழிவாக பதிவு செய்து(MP3 Format ) ஒலிவடிவில் தமிழ்க்குடில் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.  ஒலிப்பதிவு செய்யும்பொழுது தங்களைப்பற்றிய எந்த விவரமும் கொடுக்காமல் சொற்பொழிவு மட்டும் பதிவு செய்து வழங்கவேண்டுகிறோம்.  தங்கள் பெயர்,தொடர்பு எண், முகவரி புகைப்படம் இவற்றை மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிட வேண்டுகிறோம். 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் - tamilkkudil@gmail.com

அனுப்பவேண்டிய இறுதிநாள் - 10.08.15

பரிசு : முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு நூலும், சான்றிதழும் வழங்கப்படும்.

ஒவ்வொரு போட்டியும் நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கருதி பங்குகொள்ள வேண்டுகிறோம்.

நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் ஆர்வமுடைய மற்றவர்களிடத்தும் பகிர்ந்துகொண்டு தமிழ்க்குடிலின் தொடர்ந்த அனைத்துப் போட்டியினையும் சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

என்றென்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

July 17, 2015

கர்மவீரர் காமராசர் அவர்களின் பிறந்ததின கட்டுரைப்போட்டி


அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கங்கள்.
திரு காமராசர் அவர்களின் 112வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு கட்டுரைப்போட்டியினை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
போட்டி: கட்டுரைப்போட்டி
தலைப்பு :
1. தனிமனிதனாகக் காமராசர்
2. தேசியத்தலைவராகக் காமராசர்
3. நிர்வாகியாகக் காமராசர்
4. அரசியல்வாதியாகக் காமராசர்
விதிமுறை:
போட்டியில் கலந்துகொள்பவர்கள் உலகின் எந்த மூலையில் இருப்பவராகவும் இருக்கலாம்.
குறைந்தது 3 பக்கம் முதல் 10 பக்கம் வரை இருக்கவேண்டும்.
படைப்புகள் வேறு எங்கும் பகிர்ந்ததாகவோ, அச்சிடப்பட்டதாகவோ இல்லாமல் தமிழ்க்குடிலின் போட்டிக்காக பிரத்யேகமா எழுதி அனுப்பவேண்டும்.
கட்டுரைகள் காப்பி பேஸ்ட்டாக இல்லாமல் தங்கள் வாழ்வில், உங்கள் பார்வையில் நீங்கள் திரு.காமராசரை உணர்ந்த விதத்தில் கட்டுரைகள் படைக்க வேண்டுகிறோம்.
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 15.08.15
படைப்பாளிகள் தங்கள் பெயர், தொடர்பு எண், முகவரியுடன் படைப்புகளை tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது.
படைப்புகளை லதா, பாமினி ஒருங்குறியில் தட்டச்சு செய்து வேர்டு ஆவணமாக அனுப்பவேண்டுகிறோம். தங்கள் படைப்புகள் எழுதியிருக்கும் பக்கத்தில் தங்கள் பெயர், முகவரி குறிப்பிடாமல் மின்னஞ்சலில் மட்டும் குறிப்பிட்டால் போதுமானது.
முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு, வெற்றி பெற்றவரின் பெயர் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இலச்சினை(சின்னம்-Logo) பொறிக்கப்பட்ட பதக்கம் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளை வழங்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி போட்டிக்காக வரும் கட்டுரைகளில் சிறந்தபடைப்புகள் தேர்வு செய்யப்பட்டு நூலாகவும் அச்சிடப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக. அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொள்வதோடு அல்லாமல் மற்றவர்களையும் எழுத ஊக்குவித்து இந்தப்போட்டியினை சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

July 09, 2015

2015 அன்னையர்தின கட்டுரைப்போட்டி - மூன்றாம் பரிசு

மூன்றாம் பரிசு பெறுபவர் : நர்கிஸ் ஜியாவுதீன், ஐக்கிய அரபு அமீரகம்

தலைப்பு                             :  அன்னை ஒரு வரம்

அன்னை - உலகின் ஆதாரம்

உயிர்களின் வாழ்விடமாய்த் திகழும் இப்பூமிக்கு ஆதாரமாய்த் திகழ்வது எது? ஆக்ஸிஜனும் நீரும் மட்டும் பூமியை அன்னையாக்கிவிடுமா? எதனோடும் ஒப்பிட இயலா அன்னையே பூமியின் ஆதாரம் என்பேன். அதனால்தான் பூமி 'தாய்' எனும் பெயர் பெற்றாள், மேன்மையுற்றாள். இப்புவியில் நிறைந்திருக்கும் உயிர்களில் உணர்வால் வாழ்பவையே எண்ணிக்கையில் அதிகம். ஆறாம் அறிவுபடைத்த மனித இனம் உணர்வை இழந்து வாழ்வது சாத்தியமில்லை. அப்படியான உணர்வுகளில் உன்னதமாக போற்றப்படுவது தாயெனும் உணர்வு.

அன்னை - உறவின் ஆதாரம்

மனித இனம் வேண்டுமானால் பெற்றோரைத்தவிர பல்வேறு உறவுகளைக் கொண்டிருக்கலாம். அத்தனை உறவுகளில் சிலவற்றைப் போற்றவும் சிலவற்றைத் தூற்றவும் செய்யலாம். அத்தனையிலும் அன்னை என்னும் உறவை மேன்மையாகக் கொண்டாடவும் செய்யலாம். ஆனால் அன்னை என்னும் உறவு மனித இனத்தால் கணக்கிடப்படுவது அன்றி, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளாலும் உணரப்பட்டும், உயர்வாகப் பேணப்பட்டும் வருகின்ற ஒரு உணர்வு. எனவே, அன்னை என்னும் உறவு அனைத்து உயிரின்ங்களுக்கும் ஒரு இன்றியமையாத, மறுக்க முடியாத, பிரிக்க முடியாத ஒரு பந்தமாகும்.

பறவை இனத்தை எடுத்துக் கொண்டால், அன்னை தன் குஞ்சுகளுக்காக தொலைதூரத்திலிருந்து உணவு சேகரித்துக் கொண்டு வருவது, அவற்றை பாதுகாப்பாய் வளர்ப்பது, அவற்றுக்குரிய பணிகளைக் கற்றுத் தருவது, மற்றவைகளின் தாக்குதலிலிருந்து போராடிக் காப்பாற்றுவது என்று நமக்கே பாடம் கற்றுத்தரும் தாய்மையின் குணாதிசயங்கள் ஏராளம்.

உதாரணத்திற்கு, வலிமை மிகுந்த பருந்திடமிருந்து தன் குஞ்சுகளை, தன் சிறகுகளுக்குள் மறைத்துக் காப்பாற்றும் வலிமையற்ற சிறு பறவையான கோழி. இங்கே வலிமையைவிடவும், தன் பிள்ளைகளைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்னும் அதன் தாய்மை எடுக்கும் முடிவே இதன் வெளிப்பாடு. நாய், பூனை போன்றவை புதிதாய்ப் பிறந்த தன் குட்டிகளின் அருகில் யாரையும் அண்ட விடாது, காரணம் குட்டியைப் பாதுகாக்க அது வேறு யார்மீதும் நம்பிக்கை கொள்வதில்லை. தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகுவதுமில்லை. கங்காரு இன்னும் ஒருபடி மேலே போய், தன் குட்டியை தன் வயிற்றில் சுமந்தவாறே தன் பயணத்தைத் தொடர்வது தாய்மையின் உச்சம். இதுபோல ஒவ்வொரு உயிரினமும் தன் குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்வது இயற்கையானது என்றாலும், அவ்வப்போது மாறும் சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடி அவற்றைக் காப்பாற்ற முயல்வது இயற்கையை மிஞ்சும் அதன் தாய்மையின் வியப்பே! அதுதான் அன்னையருக்கான சிறப்பே!

அன்னை - நிபந்தனைகளற்ற பந்தம்

உலகில் ஒவ்வொரு உறவும் ஏதோவொரு நிபந்தனையுடனும் எதிர்பார்ப்புடனும் பிரதிபலன் எதிர்பார்த்தும் என்று ஒருவகையான நிர்பந்தத்துடன்தான் உலா வருகின்றன. இவற்றில் ஏதோவொன்று நடவாமல் போனால், அந்த உறவின் நடையும் நின்று போக்க்கூடும். சில சமயம் முறிந்துபோகவும் கூடும்.

கணவன் மனைவி துவங்கி, அண்ணன் தங்கையிலிருந்து, அத்தை மாமாவிலிருந்து, ஆசிரியர் மாணாக்கர் என்றும், ஏன் நட்பிலேகூட சிலசமயம் எதிர்பார்ப்புகளும் நிபந்தனைகளும் இல்லாமலிருப்பதில்லை. அவை ஏதோவொரு சமயத்தில் பெரிதாகி அந்த உறவுக்கே பாதகமாவது இன்றைய உலகில் கண்கூடு. உறவுகளைக் கவனமாய்க் கட்டிக்காப்பது பெரும்பாடு.

ஆனால் அத்தனையிலும் மேன்மையாய், அன்னை என்னும் உறவு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி, குழந்தை பெறுவது ஒன்றே தன் லட்சியமாய், கருவுற்ற செய்தி அறிந்த கணம் முதல் தன் நலன் மறந்து தன் குழந்தையின் நலனை மட்டுமே எண்ணி வாழத்துவங்குகிறாள். அந்த கால கட்ட்த்தில் நிகழும் எந்த ஒரு விஷயமும் அவளை பாதிப்பதில்லை, அவளது எண்ணம் முழுவதும் தாய்மை மேலோங்கி குழந்தைபற்றிய எண்ணத்திலேதான் தன் ஊனையும் உயிரையும் கரைத்து வாழ்கிறாள். 9 மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு அடியும் பார்த்துப் பார்த்து வைப்பாள். கருவிலிருக்கும் சிசுவுக்காக கசப்பான கசாயங்களையும் மன உவப்புடன் குடித்திடுவாள்.

தூக்கத்தில் புரண்டு படுத்தால் குழந்தையை குடல் சுற்றிக்கொள்ளும் ஆபத்தை எண்ணி, ஒவ்வொரு முறையும் எழுந்து அமர்ந்து பின் திரும்பிப் படுப்பதையும் ஆனந்தமாய் அனுபவிப்பாள். அக்கணங்களில் சோம்பலையும் தாய்மையால் வெல்வாள். பிடித்தவை உண்ணாமல் துறப்பாள். பத்தியத்தை பாங்காய்க் காப்பாள்.

ஒரு கவிஞர் எழுதினார்:

தன் வயிற்றில் வளரும் குழந்தை
ஆப்ரஹாம் லிங்கனாகுமோ?
அன்னை தெரசாவாகுமோ?
அதிபயங்கர கொடியவனாகுமோ?
தீவிரவாதியாகுமோ?
எதுவும் தெரியாமல் சுமப்பவள் அன்னை!
எதுவும் எதிர்பாராமல் உயிர் தருபவள் அன்னை!

அம்மா - ஆதியும் அந்தமும்

குழந்தைக்கு அவளே ஆதியாவாள்! அன்புக்கு அவளே அர்த்தமாவாள்! குழந்தையின் மகிழ்வுக்கு அவளே பொருளாவாள்! குறையற்ற மனதால் குழந்தையை நிறைவுடன் கொண்டாடுவாள்!

பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்வின் வெளிச்சமாய்த் திகழ்வாள்! ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் உற்சாகமாய் ஊக்கம் தந்தும், துவளும்போதும் தோல்வியுறும்போதும் ஆறுதல் தந்து, அரவணைத்து, அழகாய் ஆலோசனை தந்து மீண்டும் முயற்சியைத் தொடர தூண்டுகோலாகவும், வலிகளைத் தாங்கி துயரங்களிலிருந்து மீட்கும் அற்புதத் துணை அகிலத்தில் அன்னை.

அன்னை - முதல் ஆசான்

பிள்ளைகளுக்கு அன்பு முதல், பண்பு, பாசம், பாதுகாப்பு, நல்ல பழக்கவழக்கங்கள் என்று அனைத்தும் கற்றுக்கொடுக்கும் முதல் ஆசான் அன்னையே. அதனால்தான் கவிஞர் பாடினார்:

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே - அவன்
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே!

பிள்ளைகளுக்கு இயற்கையாகவே முன்னுதாரணமாய்த் திகழ்வது அன்னையர்தான். அன்னையரின் குணாதிசயங்களை ஒட்டியே குழந்தைகளின் மனநிலையும் பிரதிபலிப்பாக அமைகின்றது. பிள்ளைகளின் பலம் பலவீனம் அறிந்து அதற்கேற்றவாறு, இச்சமூகத்தில் வாழ்வை அமைத்துக் கொள்ள நல்ல ஆலோசனைகளைத் தந்து ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறாள்!

இன்றைய சூழலில் குழந்தையைப்பிரிந்து வேலைக்குப் போகும் அம்மாக்கள், ஐந்து நாட்கள் அன்பை அடக்கிக்கொண்டு, வார விடுமுறை நாட்களில் மட்டும் அத்தனை அன்பையும் பாசத்தையும் கொட்டித்தீர்ப்பது மட்டுமில்லாமல், பிற்காலத்தில் எதையும் எதிர்பாராமல் எட்ட நின்று அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் உன்னத உறவுகளாகவே நிலைத்து நிற்கின்ற அன்னையர், இப்பூவுலகின் தேவதையர்!

நடுவர் குறிப்பு: அன்னை ஒரு வரம் எனும் இந்தக்கட்டுரை கருத்தாழம் மிக்கதாக உள்ளது. மேலும் விரிவாக எழுதியிருக்கலாம். மொழிநடையில் கவனம் கொண்டு மேலும் சிறப்படைய வாழ்த்துகள்.  

2015 அன்னையர் தின கட்டுரைப்போட்டி - இரண்டாம் பரிசு

இரண்டாம் பரிசு பெற்றவர் : திருமதி வசந்தா ராமன், தில்லி.

தலைப்பு                               : அன்பின் அவதாரம் தாய்

மஹாபாரதத்தில் தாயின் அன்பிற்க்காக ஏங்கும் ஒரே ஒரு கதாபாத்திரம் கர்ணண். அவன் இறக்கும் முன் தாயை அருகாமையில் கண்டான். அவளின் அழுகையை உணர்ந்தான். அன்பாக ஆறுதலாக அவள் அவனைத் தேற்றிப் பேசினாள். ஆனால் அந்த அன்பினை நன்கு அனுபவித்து உணரும் முன் அவன் மண்ணோடு மண்ணானான்.

ஒரு குடும்பத்தில் பெண்களின் பங்கு தான் அதிகம். அவளின் பாசம், பரிவு, அரவணைப்பு-ஆண்களால் செய்ய முடியாத செயல்கள். ஒரு காலத்தில் தந்தை வெளியே சென்று தொழில் செய்து பணம், பொருள் கொண்டு வருவார். தாய் வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வாள். அப்படி ஒரு நிலை இருந்ததால் அவள் தன் குழந்தைகளின் மேல் அன்பு செலுத்தி, அரவணைத்து, நல்ல குணம் வளர நல்லொழுக்கங்களை கற்பித்து நல்லவர்களாக வளர்க்க பெரும் பாடு படுகிறாள்.

தனக்கு உணவு இல்லையென்றாலும் எப்படியாவது கஷ்டப்பட்டு கிடைப்பதை தன் குழந்தைகளுக்கு பகிர்ந்து அன்புடன் கொடுக்கிறாள். அங்கே அவளின் அன்பு வெளியாகிறது. பாசம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. பெற்ற பிள்ளைகளுக்கு தனக்கு கிடைத்ததைப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு தான் குளிர்ந்த நீர் பருகித் தன் வயிற்றில் ஏற்படும் பசித் தீயை அணைத்து வாழ்பவர்கள் பலரும் இன்னமும் ஆங்காங்கே அதிகமாகவேக் காணப் படுகிறார்கள். தினமும் படுத்துத் தூங்க இடம் இல்லாமல் இருக்கும் ஏழைத் தாய்மார்கள் சாலையின் ஓரத்திலேயே படுத்து உறங்குகிறார்கள். மற்றும் ஒரு விஷயத்தை நாம் கவனித்திருப்போம். தான் குளிரில் நடுங்கினாலும் தன்னிடம் இருக்கும் மாற்றுப் புடவையை, தன் கண்மணிகளின் உடல் உறுத்தாமல் இருக்க, பாதிப் புடவையை தரையில் விரித்து, மீதிப் பாதியை மேலேப் போர்த்தி அது கலைந்துவிடாமல் தன் கையால் அவர்களை அணைத்து தானும் உறங்குபவளின் அன்பை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்றே கூறலாம். இது அன்றும் இன்றும் எல்லா நாட்டிலும் உள்ள ஏழைத் தாயின் அன்றாட வாழ்க்கை. இதனை ஒரு தாயின் தியாகம் என்றே குறிப்பிடலாம்; தாயின் அன்பு, இவையெல்லாம் தான் பிள்ளைகளை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது. தாய் அளவு தந்தையால் தன் குழந்தைகளின் மீது பாசத்தினை செலுத்த முடிவதில்லை.
நல்ல தாய், தந்தை அமைவது கடவுள் நமக்கு தந்த வரம். அதனை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வது நம் புத்திசாலித்தனம் என்று தான் கூற வேண்டும். பணம், குணம், வாழ்க்கை அமைப்பு இவை எல்லாம் ஒரு சேர எல்லாவற்றுக்கும் காரணகர்த்தவாக அமைவது தாயன்பு தான்.

ஒரு தாய் தன் வயிற்றில் கரு உண்டான விவரம் அறியும் நாளினை மறக்க முடியாத  நாளாக நினைப்பாள். அந்த உணர்வுகளை என்னவென்று எப்படி சொல்வேன், சொல்ல வார்த்தைகள் இல்லையே என்று எண்ணுவாள். என் உயிருடன் உறைந்திருக்கும் உயிரினை எப்போது பார்ப்போம் என்று மனதில் ஒரு ஏக்கத்துடன் அதே சமயம் அந்த நிகழ்வை எதிர் நோக்கும் ஆவல் கலந்த உணர்ச்சியும் உள்ளத்தில் தோன்றி உடலை சிலிர்க்க வைக்கும். இந்த உணர்வுகளையெல்லாம் ஆண்கள் உணர வாய்ப்பில்லை. ஆக அவர்களிடம், தாயை விட அதிகமான பாசத்தை எதிர் பார்க்கவமும் முடியாது, அவர்களால் வெளிப்படுத்திக் காட்டவும் முடியாது. கரு வயிற்றில் உருவானது முதல் தான் உண்ணும் உணவு வகைகளை தன் ருசிக்காக அன்றி கருவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே உண்ணுவாள். இது ஒரு தாயின் அன்பு, அக்கறை, பாசம் இவற்றின் வெளிப்பாடு ஆகும்.

திருமணத்திற்கு முன் ஒரு சிறு முள் காலில் குத்தி விட்டால் கூட குடும்பத்தினரை பாடாய் படுத்தி அமர்களப்படுத்தி விடுவார்கள். அப்படியான பெண்கள் திருமணத்திற்க்குப் பின் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பொழுது அதனால் ஏற்படும் வலிகளை சுகமான சுமையின் இன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றனர். சந்தோஷம் அடைகின்றனர்.

தாய் தன் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் பொழுது அன்பையும் பண்பையும் சேர்த்து ஊட்டுகிறாள். அவர்களை அலங்கரிக்கும் பொழுது பார்த்து பார்த்து, ரசித்து ரசித்து அவளின் அன்பை வெளிப்படுத்துகிறாள். அழும் குழந்தையை அரவணைத்து தாய் பால் கொடுத்து தூங்க வைப்பதும், தனக்கு பாட தெரியாவிட்டாலும் ஏதோ தெரிந்தவரை பாடி தூங்க வைப்பதும் எல்லாமே, குழந்தை வளரும் வரை, ஒரு இன்ப உலகில் சஞ்சரிப்பதைப் போல அனுபவித்து ரசிக்கிறாள். தன் குழந்தை திரும்பிப் படுக்கும் பொழுது,படுத்தபடி தலை தூக்கிப் பார்க்கும் போதும் தானும் குழந்தை ஆகிவிட்டதைப் போல படுத்து ரசித்து மகிழ்வதும், அது தவழும் போதும், படி தாண்டும் போதும் சுவர் பிடித்து எழுந்திருக்கும் போதும், கை பிடிக்காமல் கால் தடுமாற  நடக்க துவங்கும் போதும்  ஆஹா! என்ன கண்கொள்ளாக் காட்சி என ஆனந்த களி நடனம் புரிதலும், எனக்கு எவ்வளவு அழகான குழந்தையைக் கொடுத்த கடவுளுக்கு பூசை செய்து நன்றி கூறுவதும் எல்லாமே அந்தக் குழந்தையினைச் சுற்றி சுற்றியே நடக்கும் நிகழ்ச்சிகளாகவே இருக்கும்.
மகன் அல்லது மகளுக்கு 50 வயது ஆனாலும் அவர்களின் செயல்களை, அவர்களுக்குக் கிடைக்கும் புகழ்கள் எல்லாமே தனக்கே கிடைத்தது போல் மனம் மகிழ்ந்து நெஞ்சம் முழுவதும் ஆனந்தத்தில் திக்கு முக்காட நெஞ்சம் விம்ம ஆனந்தக் கண்ணீர் வடிப்பவள் தாய் மட்டுமே என்று கூறலாம். திருக்குறளில் கூறிய குறள் ஒன்றில் சொல்லியபடி :

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்”
தாய் உள்ளம் உணர்ந்த எவருக்கும் இந்த குறளின் அர்த்தம் உண்மை என்பது புலனாகிறது. படிப்பு, உத்தியோகம், திருமணம் என்று குழந்தைகளின் வாழ்வு நல்வாழ்வாக அமைய எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று தெய்வங்களிடம் முறையிட்டு பூசை செய்து வருவதும், அவர்களுக்காக விரதமிருப்பதும் எல்லாமே தாய் தான் குழந்தைகளை மேல் உள்ள அதிகப்படியான அன்பினால் செய்கிறாள்.

தாய்மையைப் போற்ற வேண்டும். தாயை மதிக்க வேண்டும். அவளின் தியாக குணத்தையும் அன்பையும் மனதில் பதித்துக் கொண்டு பெற்றோர்களைத் தங்களது மனதில் தெய்வமெனப் போற்றி அவர்களைக் கடைசி காலம் வரை தங்களுடனேயே வைத்து, அன்பும், ஆதரவும் கொடுத்து மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது இந்தக்கால பெற்றோர்களின் வேண்டுதலாக உள்ளது.  பிள்ளைகளின் காலம் வரை பெற்றோர்களின் ஆசி அவர்களுக்கு நல்வாழ்வை அளிக்கும் என்பது நிச்சயம். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை இந்த அளவு அன்பும் ஆதரவுமாக வளர்க்கிறார்கள் என்றால் பொது சேவை செய்பவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது.  தங்களது வாழ்க்கை முழுவதும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர், மற்றும் அனாதைகளுக்காகவும் அர்பணித்த அன்னை தெரெசா, பாண்டிச்சேரி அன்னை, பகலிலும், இரவில் மெழுகுவர்த்தி ஏந்தியும் நோயாளிகளுக்கு சேவை செய்து ஆறுதல் கூறிய ப்ளாரென்ஸ் நைட்டிங்கேல் போன்றவர்களை எண்ணிப் பார்க்கும் பொழுது அன்னையர் தினத்தன்று தாய்மார்கள் அனைவரையும் மனமாற வாழ்த்தி சந்தோஷப் படுத்த வேண்டும். நாட்டிற்க்கு உதவியவர்களை நாம் அன்னை என்ற அடை மொழி கொடுத்துக் குறிப்பிடும் பொழுது அவர்களைப் பெற்ற தாய்மார்கள் உண்மையிலேயே தெய்வமாகத் தொழப்பட வேண்டிய பெண் தெய்வங்கள்.

அன்பு என்றால் அது அன்னையைக் குறிக்கும்
பாசம் என்றால் அது தாயைக் குறிக்கும்
கள்ளமில்லாத அன்பு அது எங்கே கிடைக்கும்?
அது தாயிடம் மட்டுமே கிடைக்கும்

உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் நம் நன்றியைத்தெரிவிக்கும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப் படுகிறது. அதனால் தான் கவிஞர் எழுதினார் ;
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்று தாயைக் கோவிலில் குடி கொண்டிருக்கும் தெய்வத்திற்கு சமமாக கொண்டாட வேண்டும்.
வாழ்த்துக்கள்

நடுவர் குறிப்பு: கட்டுரை உள்ளத்தை தொடுவதாக உள்ளது.  இருப்பினும் முழுமையடையாத ஒரு உணர்வு. மொழி ஆளுமையில் இன்னும் சற்று கவனம் செலுத்தலாம் என்பது எமது கருத்து.  வாழ்த்துகள்

2015 அன்னையர் தின கட்டுரைப்போட்டி - முதல் பரிசு

முதல் பரிசு பெற்றவர் : முனைவர். ஜ. பிரேமலதா, தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக்கல்லூரி, சேலம்-7

தலைப்பு                        : அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை.


ஒவ்வொரு மதத்திலும் எத்தனை கடவுளர்கள். சில மதங்கள் பெண்களை மிகுதியாகக் கடவுளாக வழிபடுகின்றன. சில மதங்களில் பெண்கள் வழிபடப்படுவதுமில்லை. இஃது அவரவர் சமய, மத உரிமை. ஆனால் எந்தச் சமயமாக, மதமாக இருப்பினும் தாயை ஒரு தெய்வமாகப் போற்றாத மதமோ சமயமோ இல்லை. உலகின் அனைத்து மதங்களும் சமயங்களும் தாயைத்தான் முதலில் போற்றுகின்றன. இவ்வாறு அனைத்து மக்களும் ஒன்றுபடும் இந்தக் கருத்தினை அனைவரும் உணர்ந்தால் உலகில் எதற்கித்தனை கடவுளர்கள்?

எதற்கிந்த சாதி, மத, இன சமயச் சண்டைகள்? ஒரு மதத்திற்குள்ளேயே எத்தனை முரண்பாடுகள்? தாய் என்னும் பெயரிலேயே வீட்டிலேயே தெய்வமிருக்க எதற்கிந்த கருத்துவேறுபாடுகள்? இறைவனை அடைய பல வழிகளைச் சமயங்கள் கூறுகின்றன. எனினும் எல்லா மார்க்கங்களையும் ஒருசேர அடைய தாயின் பாதத்தை வணங்கினால் போதும்.
ஆனால் அந்தத் தாய்க்கு கடவுள் யார் தெரியுமா? ஒரு தாயின் மனம் எங்கிருக்கும்? அது பிள்ளைகளையே சுற்றி வரும். அவள் பற்று வைத்த பரம்பொருள் யார்? வேறு யார்? பிள்ளைகள்தான். தன் குழந்தைகளின் நலன் ஒன்றைத் தவிர வேறொன்றையும் சிந்தித்தறியாத தாயை விடச் சிறந்த உறவு உலகில் இல்லை. குழந்தைகளுக்காகத் தன் உடல்நலனையும் பாராது தொண்டாற்றும் தாயன்றி உலகில் வேறோர் தெய்வமுண்டோ?
ஒவ்வொரு இல்லங்களும் ஆலயம்தான். அன்னை என்னும் கடவுளை உணர்ந்து வணங்கி வந்தால் கோயிலுக்கே போகத் தேவையில்லை. ஆண்டவனை நம்பாதவர்கள் கூட அன்னையை நம்புவார்கள். உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட, எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு. பற்றுகளிலிருந்தும் விடுபட்ட துறவிகளுக்குப் பூர்வாசிரமம் இல்லை என்கிறது சனாதன தர்மம். ஒரு துறவியை, அவரைப் பெற்ற தந்தை சந்திக்க நேர்ந்தால், தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும். ஆனால் தாய் சந்திக்க நேர்ந்தால், அவள் திருவடிகளில் துறவி விழுந்து தொழ வேண்டும். தந்தைகட்கு இல்லாத மதிப்பை இந்து தர்மம் தாய்க்குத் தந்திருக்கிறது.

இசுலாமியக் கவிஞர்.கா.மு.ஷெரீப் “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை – அவள் அடி தொழ மறப்பவர் மனிதரில்லை, மண்ணில் மனிதரில்லை”என்கிறார்.
சுயநலப் பற்றற்ற நிலையில் வாழும் தாய், இன்ப வாழ்விற்குச் சுயநலத்தை நீக்கி வாழ வேண்டும் என்ற உரிய தத்துவத்தை வாழ்ந்து காட்டியே உலகிற்கு உணர்த்த முயல்கிறாள். கடவுளின் அன்பு, கருணை நம்மில் சிலரால் கூட உணர முடியாதது. ஆனால் அவர்களுக்கும் தாயின் அன்பு உணரக் கூடியதே. தாயன்பைப் புரிந்து கொண்டவர்களால் தாயின் அன்பு மூலமே கடவுளை நாம் தரிசிக்க முடியும்என்பதும் புலப்படும்..
மதச் சார்பற்றவர்களின் மனதிலும் தாயின் வாழ்க்கை குறித்த பதிவுகள் நிச்சயம் சலனத்தை ஏற்படுத்தும்.
தாய்மையின் ஆற்றலையும், பண்பு நலன்களையும் உணர்ந்த மனிதன் தன்னைக் காக்கும் நடமாடும் தெய்வமாகவே தாயை ஆதிமுதலே வழிபட்டு வந்துள்ளான். தாயைத் தெய்வமாக வழிபடும் மரபு சுமேரியா, எகிப்து, அசிரியா, பாரதம் முதலான நாடுகளில் உண்டு.

பிள்ளைகள் தன்னைப் போற்ற வேண்டும், தெய்வமாக வணங்க வேண்டும் என்று நினைத்து எதிர்பார்த்து எந்தத் தாயும் தன் பணியைச் செய்வதில்லை. பிள்ளைகளில் வெற்றிகளின் பின்னால் எங்கோ ஓரிடத்தில் இன்னும் ஒன்றும் அறியாதவள் போலவே ஒவ்வொரு தாயும் நின்று கொண்டிருக்கிறாள் என்பதுதான் உண்மை.
சுயநலப்பற்றற்ற நிலையில் உலகில் தாய் ஒருத்திதான் இருக்கின்றாள். சுயநலத்தை நீக்கல் வேண்டும் என்னும் கோட்பாட்டைத் தாய் ஒருத்தியிடமிருந்தே மற்றவர்கள் கற்றுக்கொள்ள முடியும். கடவுளின் அன்புக்கு அடுத்தபடியில் இருக்கிறது தாயின் அன்பு. ஆதலால் தாயின் அன்பு மூலமே கடவுள் அன்பை நாம் ஓரளவு அறிந்துகொள்ள முடியும்.
“இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள்தன் முழுவாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்“ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

அன்பு நீரைப் போன்றது. நீரை எந்தக் குவளையில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தைப் பெறும். நம்மைத் தாங்கும் நிலத்தை விடத் தாய் பெரியவள். தாயை விட எதுவும் பெரிதில்லை. ஆயுள் முழுவதும் குடிக்கும் குடிநீரைப் போன்று மிக அவசியமானவள். எனவேதான், தாயை பூமியோடும், நீரோடும் ஒப்பிடுகின்றார்கள் கவிஞர்கள்.
தாயின் அன்பு, தூய அன்பு. விளம்பரம் எதிர்பார்க்காத அன்பு, பாராட்டு எதிர்பார்க்காத அன்பு.. துயரத்தில் தோள் கொடுப்பவன் நண்பன், துயரப்படுபவர் ஊரார், கண்ணீரைக் துடைப்பவள் மனைவி, உயிரையே கொடுக்க முன் வருபவள் தான் தாய். அப்படிப்பட்ட பண்புடைய தாய் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தன் மக்களின் உயர்விற்காக அர்ப்பணிப்பவள். ஆனால் அதைச் சொல்லிக் காட்டக் கூடத் தெரியாதவள்.

ஒவ்வொரு தாய்க்கும், பிள்ளைகளின் நலனே குறிக்கோள். எத்தனைப் பணிகளைப் பிள்ளைகளுக்குச் செய்தாலும் அதைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தெரியாதவள்தான் ஒவ்வொரு தாயும். ஒரு தாய்க்கு பகல் நேர ஓய்வு, இரவு நேர ஓய்வு இரண்டும் எப்போதுமில்லை. எனினும் அவள் பணியை உணராத உள்ளங்களும் இந்த உலகில் உண்டு.  
வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு ஆழ்ந்த கருணை, வெறுப்பைக் காட்டாது அன்பை மட்டுமே அள்ளிக்கொட்டும் அமுதசுரபி கரங்களைக் கொண்டுள்ளவள்  தாயன்றி வேறு யார்? குழந்தை ஒல்லியோ, குண்டோ, அழகோ, அசடோ, கறுப்போ, வெள்ளையோ அதுவெல்லாம் தாய்க்கு ஒருபொருட்டேயில்லை. பிள்ளைகளிடம் தாயின் மனம் இதுபோன்ற விசயங்களில் எப்போதும் குறை காணாது. எப்படி இருந்தாலும் தாய்க்குத் தன் பிள்ளை பொன் குஞ்சுதான். அவளைத் தவிர வேறு யாராலும் தன் குழந்தை எப்படியிருந்தாலும் நேசிக்க முடியாது.
உலகிலுள்ள ஒவ்வொன்றும் ஒன்றைறொன்றை எதிர்பார்த்தே விரும்புன்றது. ஆனால் எதிர்பார்ப்பில்லாத அன்பு தாயன்பு ஒன்றுதான். தான் பெற்ற மக்கள் தன்னை வெறுத்தாலும், கோபமாகப் பேசினாலும் அன்பினாலே அதையெல்லாம் வென்றிடும் பக்குவம் தாயிடம்தான் உள்ளது. தனது குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள் தாய்தான். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள் தாய்தான்..

தாயென்பவள் உள்ளுணர்வால் உந்தப் பெற்ற உயர் தத்துவஞானி. தாய்தான் அனைத்திற்கும் மூலாதாரம். ஆணிவேர். யார் இல்லையெனில் இந்த உலகிற்கு வந்திருக்க முடியாதோ, யார் நம் வாழ்வின் அனைத்து நலங்களையும் துவக்கி வைக்கிறாரோ அவரே தெய்வம். அந்தத் தாயை வணங்குவதுதானே முதற்கடமை?

புண்ணியங்களுக்கேற்றார் போல் பலன் அருளும் தன்மை பகவானுக்கு உண்டு.ஆனால் பத்துமாதம் தன் குழந்தைக்கன்றி அனைத்துக் குழந்தைகளுக்கும் பாகுபாடு பாராமல் கருணைகாட்டக்கூடியவள் தாய்தான்  என்பதை ஒரு சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது.! ஈரானில் ஒரு தாயின் மகனை ஒருவன் கொன்றுவிடுகிறான் “கழுத்தில் தூக்குக்கயிறு இறுக்கப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்படவிருந்த இறுதித் தருணத்தில், படுகொலைக் கைதியை அவரால் கொல்லப்பட்ட இளைஞனின் தாய் முகத்தில் அறைந்து மன்னித்துவிடுகிறாள்.  நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் ஈரானில் நடந்துள்ளது. தனது மகனைக் கொன்ற படுகொலையாளிக்கும் மன்னிப்பளித்த தாயை உலகம் கொண்டாடியது.
ஆண்மகன் அல்லது பெண்மகள் ஆகியோர்களுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் வரும்போது தங்களுக்கு எவ்வளவு வயதான பின்பும் தங்களுடைய தாயின் மடியில் தலை வைத்து படுத்தாலே தங்களுக்குக் கவலையெல்லாம் மறந்து போகும் சூழ்நிலை இன்றும் உள்ளது.
வயதான பின்னும் ஒரு தாயின் பணிகள் ஓய்வதில்லை. ஒரு தாய்க்கு எப்போதும் ஓய்வில்லை. பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகள் என ஒரு தாயின் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் பெற்றெடுத்த அன்னையவளை வயதான காலத்தில் அரவணைத்துக் கொள்ளாமல், முதியோர் இல்லங்களிலும், அனாதை விடுதிகளிலும் சேர்ப்பது எவ்வளவு பெரிய கொடுமை!
ஒரு தாய் தன் பிள்ளைகளைப் பெறுவதற்காக அழலாம். பெற்றதற்காக அழக்கூடாது. பிரசவ வேதனையைவிடக் கொடுமையானது பிள்ளை தன்னை முதியோர் இல்லத்தில் தள்ளும் போது ஏற்படும் வலி. அப்போதும் கூடத் தாய் தன் மக்களின் நல் வாழ்விற்காகப் பிரார்த்தனை செய்வதிலேயே தன் வாழ்நாளைக் கழித்து விடுவாள்.
‘ “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?” என்கிறது ஒரு திரைப்படப்பாடல். இந்தப் பாடல் கூறும் உண்மையை உணராதவர் என்ன பெற்று என்ன பயன்? தாயை மிஞ்சிய சொத்து எதுவுமில்லை. பிரபஞ்சத்தைப் படைத்தளித்த பரம்பொருள் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியாததால்தான், ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தாயைத் தந்தது என்பர். காமராஜர் தாய்க்கு மட்டும் மாதம்தோறும் அடிப்படைச் செலவுக்கு 120 ரூபாய் அனுப்பிவைத்தார். கலைஞர் கருணாநிதி நாத்திகம் பேசினாலும் தாயைத் தெய்வமாகத் தொழுதிடும் ஆத்திகர். எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் அம்மா என்ற சொல்லின் ஆழம் கண்டவர்கள். இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வளர்ந்தவர்களே தவிர, வீழ்ந்தவர்களில்லை.
பெற்றோர் மகனிடம் செலுத்தும் பாசம் உணர்வுபூர்வமானது. ஆழமானது. மகன் பெற்றோரிடம் செலுத்தும் பாசம் அறிவுபூர்வமானது. உணர்ச்சியால் எழுகிற பாசம் தன்னிச்சையானது. அறிவால் எழுகிற பாசம் கடமை உணர்வுடையது. பெற்றோரைப் பிள்ளைகள் புறக்கணித்தால் நாளை தங்களுக்கும் இதே நிலைமைதான் என்பதை நினைத்துப் பார்த்தாலே கடமையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். படிப்பதற்காகப் பிள்ளையை வெளியூருக்கு அனுப்பும் தாயின் கண்ணீரிலுள்ள பாசத்தைப் புரிந்து கொண்ட பிள்ளை ஒருபோதும் கடமை தவறாது.
ஆனால், பணத்தை மையமாக வைத்து உறவுகள் மதிக்கப்படும் காலம் இது. தாய்ப்பாலில் வளர்ந்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, வெளிநாடுகளில் பணியாற்றிப் பணம் சேர்க்கும் இளைஞர்கள் சிலர் இன்பங்களைப் பட்டியலிட்டு அனுபவிக்கும் அவசரத்தில், ஆதரவற்று நிற்கும் பெற்றோரைப் புறக்கணித்துவிடுகின்றனர்.
பிள்ளைகள் வசதி வாய்ப்போடு வாழ்ந்தும், முதியோர் இல்லங்களில் பெற்றோரைச் சேர்த்துவிட்டுப் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடுகின்ற சூழல் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 50 கட்டண முதியோர் இல்லங்கள் உள்ளன. இங்கிருப்பவர்களில் 51 விழுக்காட்டினர் பெண்களாவர். இவர்களில் 60 விழுக்காட்டினர் உணவு, உடை, உறையுள் ஆகிய வசதிகளின்றித் தவிக்கின்றனர் என்றது ஒரு புள்ளி விவரம். .
நடைமுறைகளைக் கூர்ந்து கவனிக்கிற பொழுது, சமூகச் சிக்கல்களுக்கான தீர்வுகள் சமூகத்திற்குள்ளேயே இருக்கிறது என்று புலப்படும். மனத்தின் ஆழத்தில் பதிந்துவிட்ட சில நிகழ்ச்சிகளே அதற்கான விடியலையும் தரும். எங்கும் தேடிப்போகத் தேவையில்லை. புதிது புதிதாய் மனித உறவுகளில் முடிச்சுகள் விழுந்துகொண்டிருக்கின்றன. காலங்கள் மாற மாறப் புதிது புதிதாய் சிக்கல்களும் முளைத்துக் கொண்டுதான் உள்ளன. அதற்கான விடியல் நம் கதவை வந்து தட்டாது. நாம்தான் தேடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். எதையும் அலட்சியப்படுத்தாமல், எல்லாவற்றிலும் அக்கறை கொண்டு, உற்றுப் பார்த்து உண்மை தேட வேண்டும்.


இன்றைய நவீன உலகில் வாழ்ந்து வருகின்ற இளைய தலைமுறையினர் தொலைக்காட்சி, சினிமா, தொலைபேசி, அலைபேசிகளினால் சீரழிந்து வருகின்றனர். பண்பாட்டு மாற்றம் விசக் காய்ச்சல் போல் நாளும் பரவி சமூகத்தின் ஆணிவேரான குடும்ப அமைப்பையே தகர்த்து வருகிறது. அந்நியக் கலாச்சாரச் சூழலில் நாம் சுயத்தைத் தொலைத்து வருகிறோம். இளைய தலைமுறையினரை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்புச் சமூகத்திற்கு உள்ளது. முதிய அன்னையர்கள்தான் பண்பாட்டை மீட்டெடுக்க உதவ முடியும்.
முதுமையின் பெரிய வளமாக இருக்கக் கூடியது நல்ல மனித உறவுகளைச் சேர்த்துக்கொள்வதாகும். குடும்பத்திலும் சரி, நண்பர்கள் உறவினர்கள் மத்தியிலும் சரி நிறைந்த அன்பைக் கொடுத்து நல்ல உறவுகளைக் கட்டி வளர்த்துக் கொள்வது முதுமையின் சிறப்பு. இப்படிப்பட்ட முதியவர்களோடு வாழும் இளம்பிள்ளைகளும் உறவுகளின் மேன்மையைப் புரிந்து கொள்ளும். குடும்பத்திற்கு மட்டுமில்லாமல், சமூகத்திற்கும் அதனால், ஏற்படும் பயன்களும் எண்ணற்கரியவை. முதியவர்கள் தமது பிள்ளைகளோடு கூட்டுக் குடும்பமாக வாழும் சமூக அமைப்பு நிலைநிறுத்தப்பட வேண்டும். அவர்களைத் தனித்து வாழ அனுமதிப்பது நல்லதில்லை.

முதியோரின் அறிவு மற்றும் வழிகாட்டுதல் இளைய தலைமுறையினருக்கு அவசியம். வாழ்வைக் கற்றுக் கொடுக்கும் முதியவர்கள் சுமையாகக் கருதாமல், வரமாகக் கருத வேண்டும். குடும்பத்தில் பெற்றோர் முதியவர்களை அரவணைத்துப் போற்றிப் பாதுகாக்கும் பொழுது, அதைப் பார்க்கும் குழந்தைகளும் அவர்களிடத்தில் மதிப்பு கொள்வர். உயர்ந்த பண்புகளைப் பெறுவர். கூட்டுக் குடும்பம் உறவுகளை மேன்மை படுத்தும். குடும்ப உறவுமுறைகளில் ஒவ்வொருவருக்குள்ளும் இடையே அன்பு என்னும் பிணைப்பு தேவை. இந்தப் பிணைப்பு வலுப்படக் காரணமாக இருப்பவர்கள் அன்னையர்களே.
ஒரு குழந்தைக்கு மட்டுமில்லாமல் ஒரு குடும்பத்திற்கும், ஒரு சமூகத்திற்கும் தன் கடமை, சுயநலமற்ற தொண்டு, வற்றாத அன்பு, நற்பண்புகள், அனைவரையும் அரவணைக்கும் மேன்மை போன்ற குணங்களால் மாபெரும் சொத்தாக விளங்கக் கூடியவள் அன்னைதானே? அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டைக் கற்றுக் கொடுக்கும் அன்னையை, முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும் சிலர், தாங்களும் தங்கள் குழந்தைக்கு தம்முடைய பண்பாட்டைச் சொல்லித் தராமல், இறுதியில் எந்தப் பண்பாடுமின்றி  இரண்டுங்கெட்டான்களாக தங்கள் அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார்கள்.
 கணவன் மனைவி இருவரும் பணிபுரிய வேண்டிய சூழலில் குழந்தைகள் அன்பிற்காக ஏங்குகின்றன. தவறான பாதைக்கு செல்லத் தொடங்குகின்றனர். வீட்டில் வயதான தாயிருந்தால், தாயின் அனுபவத்தின் முதிர்வு குழந்தைகளைச் சரியான நிலைக்குத் திரும்பக் கொண்டு வந்து விடுகிறது. இளமையும் முதுமையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து விட்டால் இச்சமூகத்தில் வன்முறை ஏது? பிரிவினை ஏது? குடும்பத்தில் சமூகத்தில் துன்பத்திற்கு இடமேயில்லை.
இன்றைய நிலையில் கணவன், மனைவி இருவரும் பணிபுரிய சூழலில் குடும்பத்தில் சிறுசிறு சலனங்கள் ஏற்படுகின்றது. அன்றாடம் பிரச்சனைகளின் நெருக்குதலில் தான் குடும்பம் இயங்குகிறது. இன்றைய வாழ்வில் குழந்தைகள், பெற்றோர்கள், கணவன், மனைவி, ஆண்கள், பெண்கள் என்று அவரவர்களுக்கெனத் தனியாகவும், பொதுவாகவும் ஏதாவது சிக்கல்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. இதுபோன்ற சூழலில் இல்லத்தில் அனுபவம் சான்ற ஒரு முதியவர் இருந்தால் அவர்கள் மிக எளிதாகச் சிக்கலை உணர்ந்து, பற்றி எரிவதற்குள் ஊதி அணைத்து விடுவர். எந்தத் தாயும் தன் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களின்போது தலையிட்டு எச்சிக்கலையும் பெரிதாவதற்குள் அதை ஒன்றுமில்லாமல் செய்து விடும் ஆற்றலை இயற்கையிலேயே பெற்றிருக்கிறாள்.

இன்று இப்படிப்பட்ட அனுபவம் சான்ற அக்கறையுள்ள முதியவர்களையெல்லாம் முதியோர் இல்லத்தில் தள்ளி வைத்துவிட்டு சிறிய சிக்கல் என்றாலே கோர்ட், விவாகரத்து என்று தனித்தனியாய் நிற்கும் அவலத்தை மிகச் சாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இன்றைய வேகமாக ஓடும் வாழ்க்கையில் அதிக நேரம் முதியவர்களிடம் செலவழிக்க முடியாத மனிதக் கூட்டங்கள் தான் நடமாடிக் கொண்டிருக்கின்றன.
முதியவர்கள் எதிர்பார்ப்பது அன்பான இதமான விசாரிப்பும், கனிவான பேச்சும், இளையவர்களின் இதயத்தில் ஒரு மூலையில் கொஞ்சம் இடமும்தான். அதை உணராமல் அன்னையர் தினத்தைக் கொண்டாடுவதால் யாருக்கு நன்மை?
தெய்வமாகத் தொழவேண்டிய அன்னையை நாளும் தொழாவிட்டாலும், அவளை முதியோர் இல்லத்தில் தள்ளாமல் எத்தனைச் சிக்கலிருந்தாலும்,  தன் தாயைத் தன்னுடனே வைத்துக்கொண்டு தன் குடும்பத்தில் அவளுக்கும் ஓரிடம் கொடுக்கும் பிள்ளைகள் வாழும் நாடே வளமான நாடு.

நடுவர் குறிப்பு: இக்கட்டுரை அன்னை தொடர்பான அனைத்துக்கூறுகளையும் உள்ளடக்கி முழுமையும், தெளிவும் எளிமையும் உடையதாக அமைந்துள்ளது. கட்டுரையாளருக்கு வாழ்த்துகள்.

July 06, 2015

2015 - அன்னையர் தின கட்டுரைப்போட்டி முடிவுகள்.

அன்பு சொந்தங்களுக்கு அன்பான வணக்கம்,
2015 ஆம் ஆண்டு அன்னையர் தினத்தை முன்னிட்டு “தமிழ்க்குடில் அறக்கட்டளை” நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிய ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் தங்களுக்கு இதோ முடிவுகள் விவரம்..
முடிவுகள் அறியும் முன்பு, தங்களுடைய வாழ்க்கைப்பணி, தமிழ்ப்பணி மற்றும் சமூகப்பணி என பல பணிகளுக்கு நடுவில், தங்களுடைய சிரமம் கருதாமல் நம் தமிழ்க்குடிலுக்காக குறுகிய கால அவகாசத்தில் சிறந்த கட்டுரைகளைத் தேர்வு செய்து கொடுத்த நடுவர்கள் பற்றிய சிறு அறிமுகம். நடுவர்களுக்கு தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் நிர்வாகம் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
கட்டுரைப் போட்டியின் நடுவர்கள்
1. உயர்திரு. முனைவர் க. இராமசாமி. செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலராக விளங்கும் முனைவர் க.இராமசாமி அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பிறந்தவர். மொழியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மொழியியல் துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். ஆங்கிலம்,இந்தி, வங்களாம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளை அறிந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் பணியில் இருந்தவர். 1983 முதல் 2003 வரை மைசூர்இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில்(CIIL) துணை இயக்குநராகப் பணியாற்றியவர். மைசூரில் பணியாற்றிய காலத்தில் தமிழ்ச் சிற்றிதழ்களை ஊக்குவிக்கும் வகையில் பல தமிழ்ச் சிற்றிதழ்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு உதவியாக இருந்தவர். தமிழ்க்கல்வி வளர்ச்சிக்குப் பலவகையில் பாடுபட்டுள்ளார். இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கப்பெற்றதும் அதன் பொறுப்பு அலுவலராக இருந்து நிறுவன வளர்ச்சிக்கு ஆக்கப்பணிகள் பலவற்றைச் செய்து வருபவர். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணிகள் பலவற்றிற்குக் கால்கோள் இட்ட பெருமை முனைவர் க.இராமசாமி அவர்களுக்கு உண்டு.
2. எழுத்தாளர் திருமதி. ஷைலஜா – பெங்களூரில் வசித்துவரும் திருமதி ஷைலஜா, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், ஓவியம், பாடகி, நடிப்பு, பிண்ணனிக் குரல், அறிவிப்பாளர் என அனைத்துத் துறையிலும் சிறந்துவிளங்குபவர்.
கனடாவிலிருந்து இணையம் வழி ஒலிபரப்பான பண்பலையில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய இவர் இதுவரை 270 சிறுகதைகள்,12 நாவல்கள்,2 குறுநாவல்கள்,5 தொடர் கட்டுரைகள்,12 வானொலிநாடகங்கள்,3 தொலைக்காட்சி நாடகங்கள் எழுதி இருக்கிறார். இன்னும் தொடர்ந்து சர்வதேச இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிவருவதோடு, விளம்பரப்படங்களுக்கும் குறும்படங்களுக்கும் பின்னணிக் குரல் தருகிறார். எழுத்திற்காக பல விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருக்கும் இவரது சிறுகதைகள் சிலகன்னட மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு : முனைவர் ஜ. பிரேமலதா , சேலம் -(அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. )
இரண்டாம் பரிசு : திருமதி வசந்தா ராமன், காசியாபாத், (தில்லி) - (அன்பின் அவதாரம் தாய்)
மூன்றாம் பரிசு : நர்கீஸ் பானு, ஐக்கிய அரபு அமீரகம்
- (அன்னை ஒரு வரம்)
பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் நடுவர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் குடும்ப உறுப்பினர்கள் சார்பாகவும், தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க்குடிலின் தமிழ்த்தோட்டத்தில் மலர்ந்து மணம்வீசும் மலர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும், வாழ்த்துகளும். இனிவரும் போட்டிகளிலும் தொடர்ந்து பங்குகொண்டு சிறப்பித்து தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்திருக்க வேண்டி வாழ்த்தி விடைபெறுகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பற்றிய நடுவரின் சிறு குறிப்பு பரிசுபெற்றக் கட்டுரைகளைப் பதியும்போது அந்தந்த கட்டுரையுடன் பகிரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
குறிப்பு: பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் நடத்தவிருக்கும் கட்டுரைப்போட்டி பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடவிருப்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில் அறக்கட்டளை.