December 20, 2015

நன்றி - கடலூர் களப்பணிக்கு உதவிக்கரம் நீட்டிய நல்லுங்களுக்கு

அன்புத்தோழமைகளுக்கு,

இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட எண்ணிய தமிழ்க்குடில், முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி,  நம்தமிழ்க்குடில் குழு 03.12.15 அன்று தன் பயணத்தைத் துவங்கியது.  கடலூர் மாவட்டம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும்வகையில் அவர்களை சந்தித்து தேவையான உதவிகளை செய்தது நம் அறக்கட்டளை வழங்கியது.






                                                                                                                                                  இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணையோடு தங்களால் வழங்கப்பட்ட பொருட்களும், நன்கொடையும் உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்றதில் மனம்நெகிழ்ந்த நன்றியையும்,  மகிழ்ச்சியையும் பயனடைந்த மக்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.

நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்ட கிராமங்கள்.

1.   ஆடூர், 2. நத்தமலை, 3. திருச்சின்னபுரம், 4. கொள்ளுமேடு, 5. இராயநல்லூர்,
6. கந்தகுமாரன், 7. கூத்தங்குடி, 8. உத்தமசோழகம், 9. வெள்ளிக்குடி,
10. மெய்யனூர், 11.தெ. விருத்தாங்கநல்லூர், 12.வ. விருத்தாங்கநல்லூர்
13.கூழப்பாடி, 14.ஓடகூர், 15.வாழக்கொல்லை, 16.பூலாப்பாடி, 17.சிறகிழந்தநல்லூர், 18. திருநாரையூர். 19. நெடுஞ்சேரி. 20. சர்வராஜன்பேட்டை, 21.நெல்லிக்குப்பம், 22. சோழவெளி, 23.திடீர்குப்பம், 24.திருக்கண்டேஸ்வரம், 25.தமிழ்குச்சிப்பாளையம்

வழங்கப்பட்ட பொருட்கள்:

போர்வை, பாய், உடைகள், அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு, மருந்து, பால்பவுடர்,  கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பிஸ்கட், பிரெட், நீர், உணவு ஆகிய பொருட்கள் அவரவர் தேவையறிந்து வழங்கப்பட்டன

மனதை அழுத்திக் கொண்டிருக்கும் வலிகளுக்கிடையே ஏற்பட்ட சின்ன மனநிறைவு‬
smile emoticon
கடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் பணிகளுக்கு இடையே நாம் செய்த மற்றொரு பணியும் இருக்கிறது.  ஆங்காங்கே கைகட்டி, ஏரிக்கரை, குளக்கரை, கோயில் வாசல், ஆற்றுப் பாலம், என கிடைத்த இடத்தில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்த உள்ளூர் இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி, அவர்களின் பிரச்சனைகளையும், தேவைகளையும், அதற்கான தேடல்களையும், ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளையும் சொல்லி, அவர்கள் சும்மா இருக்க, வெளியூர்களில் இருந்து வரும் மற்றவர்கள் களப்பணியில் ஈடுபடுவதைப் பார்க்க உங்களுக்கு உறுத்தலாக இல்லையா என்று வினாத்தொடுத்து, நாம் சென்ற அனைத்துப் பகுதிகளிலும் நமது இளைஞர்களை களப்பணியில் இறக்கி அவர்களுக்கும் சமூக அக்கறையை ஊட்டி இருக்கிறோம். இந்த பணி ஓரளவு எமக்கு நிறைவைத் தந்திருக்கிறது.

மருத்துவ உதவி, பொருளதவி நிதியுதவி அளித்த அனைத்து தோழமைகளுக்கும் உளமார்ந்த மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்

இத்துடன் சில புகைப்படங்கள் தங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம். பொருட்கள் வழங்கும் சமயம் மாலை, இரவு வேலையென்பதாலும் மற்றும் அங்குள்ள சூழல்கண்டு புகைப்படம் எடுக்கும் மனநிலை இல்லாததாலும் புகைப்படங்கள் அதிகம் எடுக்க இயலவில்லை.

சமயத்தில் கிடைத்த தங்களின் இந்த பங்களிப்பு நன்றி என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிவிடாது.  எனினும், மக்களின் தேவையறிந்து உரிய நேரத்தில் வழங்கப்பட்ட உதவிக்கு,. தங்களுக்கும் தங்களோடு இச்சேவையில் கரம் கோர்த்த அனைத்து நட்புகளுக்கும் தமிழ்க்குடிலின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.  


கடலூர் களப்பணியில் தமிழ்க்குடில் நிர்வாகி தோழர்
@ThamizhkKaathalan Thamizhkkaathalan​   அவர்களுடன் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்ட அன்புத்தம்பி @பிரியன் கண்ணன்,  தம்பி Mahendiran Mahe​ , உடன் களப்பணியாற்றிய உள்ளூர் தன்னார்வளர்கள் மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளும், உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்க்குடிலின் கடலூரின் களப்பணி இத்துடன் நின்றுவிடவில்லை என்பதையும், அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்துமுடிக்கும்வரை நம் பணிகள் தொடரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.  எங்களின் நம்பிக்கையான செயல்பாட்டிற்குத் தங்களின் தொடர்ந்த ஊக்கமே காரணம். தமிழ்க்குடிலின் சேவையில் கரம்கோர்த்து நம் செயல்பாடுகள் சிறப்படைய தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன்
தமிழ்க்குடில் :)

December 11, 2015

மிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் “மகாகவி பாரதியின் 134 வது பிறந்தநாள் விழா போட்டிகள்.”

தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும் “மகாகவி பாரதியின் 
134 வது பிறந்தநாள் விழா கவிதைப் போட்டி.”


ன்புத் தோழமைகளுக்கு,

மிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதைப் போட்டியினைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
கவிதை போட்டி விதிமுறைகள்:
1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
2. கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (உ.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
3. 20 வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
4. கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல், தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
5. ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
6. உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி
படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 25.12.15
படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்.
பரிசு விவரம்:
முதல் பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்.
இரண்டாவது பரிசு: தமிழ்க்குடில் வழங்கும் நினைவுப்பரிசு
மற்றும் சான்றிதழ்.
மூன்றாவது பரிசு: நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.
இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்ந்து அனைவரும்
ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.

December 08, 2015

அவசரத்தேவை...கடலூர்


அன்புத்தோழமைகளுக்கு கடந்த ஒரு வாரகாலமாக கடலூர் கிராமத்தில் தங்கியிருந்து 
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு களப்பணியாற்றியும் இதுவரை உதவிகள் சென்றடையாத இடங்களைப் பார்வையிட்டு பட்டியலிட்டு அவர்களுக்கு உதவிகள் கிட்ட வழிவகுத்து வருகிறது நம் தமிழ்க்குடில் குழுமம்.

ஒரு கிராமத்தைப் பார்வையிட்டு அந்த கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மட்டும் இனம்கண்டு, விதவைகள், தினசரி கூலிக்கு தற்சமயம் செய்யமுடியாது பாதிக்கப்பட்டோர் என முன்னுரிமையளித்து #கடலூருக்கு‬ நிவாரணப்பொருள் ஏற்றிவரும் அன்பர்கள் தெரிவித்தால் இதுவ்ரை உதவிகள் சென்றடையாத கிராமங்களை அடையாளம் காட்டி அங்கு சென்று பொருட்களை வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லாது கடலூர் இளைஞர்களை அங்கங்கு குழுவாக பிரித்து பாதுகாப்பாக உரிய கிராமத்தில் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூரிலிர்ந்து சுமார் 3 கிமீ அருகில் உள்ள காரைமேடு பகுதியைச்சார்ந்த 3 கிராமங்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றன. இதுபோல் நம் குழுவினரால் ஆய்வுசெய்யப்பட்ட பல கிராமங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.
பால்பவுடர்
அரிசி / உணவு சமைக்கத்தேவையான பொருட்கள்
பாய்/போர்வை
தார்பாலின்
பிஸ்கட்
உதவி செய்ய விரும்பும் அன்புள்ளங்களும், நிவாரணப்பொருட்களை கடலூருக்கு எடுத்துவரும் நட்புகளும் தொடர்புகொள்ளவேண்டுகிறோம். பொருட்களை சரியான நபருக்கு வழங்கிட நம் குழு மூலம் தங்களுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்.
உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.

என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில்"

December 05, 2015

கடலூர் நிவாரணப்பணி - சர்வராஜன்பேட்டை


நேற்று(04.12.15) கடலூர் சென்று ‪#‎உட்புற‬ கிராமங்களான சோழவெளி, நெல்லிக்குப்பம், போன்ற கிராமங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட நமது குழுமம் அதன் தொடர்ச்சியான  பணிகளை இன்று காலை நிறைவுசெய்து தற்சமயம் வீராணம் நோக்கிப் பயணித்தது. 
சர்வராஜன்பேட்டையின் சுமார் 700 குடும்பங்கள் பயன் பெரும்வகையில் நிவாரணப்பொருட்களை  கன்னியாகுமரி நண்பர்கள் வழங்கினார்கள்.  நம் தமிழ்க்குடில் வழிகாட்டியும், உதவியும் வழங்கியது.  அதைத்தொடர்ந்து வீராணம் ஏரிக்கரைப் பகுதி கிராமங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றது.  தமிழ்க்குடிலின் அடுத்த கட்டப்பயணம் நாளை. 

என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில்

December 04, 2015

கடலூர் களப்பணியில் - தமிழ்க்குடில்.

அன்புத்தோழமைகளுக்கு,
நமது தமிழ்க்குடில் குழு இன்று நிவாரணப்பொருட்கள் வழங்கிட கடலூர் மாவட்டம் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டது. நெல்லிக்குப்பம் கிராமத்தையொட்டி சோழவெளி, திடீர் குப்பம், திருக்கண்டேஸ்வரம், தமிழ்குச்சிப்பாளையம் ஆகிய நான்கு கிராமங்களுக்கும் சுமார் 1000க்கும் மேற்பட்டவர்கள் சாப்பிடும் அளவு உணவுப்பொருட்களான அரிசி, எண்ணெய், பருப்பு, பிஸ்கட், கொசுவர்த்தி சுருள், மெழுகுவர்த்தி, அத்தியாவசியத்தேவையான மருந்துப்பொருட்கள் மற்றும் துணிகள் வழங்கியது. அந்த கிராமத்தைப் பார்வையிட்ட நமது குழு எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.






இன்று தமிழ்க்குடில் அறக்கட்டளை குழு கடலூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும்வகையில் அவர்களை சந்தித்து தேவையான உதவிகளை செய்தது.
அரிசி
பருப்பு
எண்ணெய்
பால்
கொசுவர்த்தி
மெழுகுவர்த்தி,தீப்பெட்டி
உடை
பிஸ்கட்
ப்ரெட்
மருந்துகள்
ஆகிய பொருட்களை கொடுத்தது. களப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்ட அன்புத்தம்பி பிரியன் கண்ணன் தம்பி Mahendiran Mahe 
தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நிர்வாகி தோழர் Thamizhk Kaathalan Thamizhkkaathalan மற்றும் உடன் களப்பணியாற்றிய நண்பர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளும், உளமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மருத்துவ உதவி, பொருளதவி நிதியுதவி அளித்த அனைத்து தோழமைகளுக்கும் உளமார்ந்த மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நமது அடுத்த கட்ட களப்பணி எங்கு என்பது பற்றியவிவரம் விரைவில் பகிர்கிறோம். எங்களின் நம்பிக்கையான செயல்பாட்டிற்குத் தங்களின் தொடர்ந்த ஊக்கமே காரணம். 
என்றென்றும் அன்புடன்
தமிழ்க்குடில் :)
smile emotico

December 03, 2015

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் கடலூர் நிவாரணப்பணி


அன்புத்தோழமைகளுக்கு தமிழ்க்குடிலின்அன்பான வணக்கம்.

இயற்கையின் விளையாட்டில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக நம்மால் இயன்ற அளவு உதவிசெய்திட இருக்கிறோம். முதல் கட்டமாக கடலூர் மக்களுக்கு நம் கரங்களை நீட்டிட எண்ணி நம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இச்செயலில் தங்களையும் இணைத்துக்கொள்ள விரும்பும் அன்புள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவிட வேண்டுகிறோம். உங்களின் ஒவ்வொரு சிறுதுளியும் எங்கோ இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்குப் பயன்படும் என்பதால் தங்களுடைய ஒத்துழைப்பையும் வழங்கிட வேண்டுகிறோம்.  தமிழ்க்குடில் அன்பர்கள் இன்று நிவாரணப்பொருட்களோடு கடலூருக்கு சென்றுள்ளனர். 

நம் பயணத்தில் தொடர்ந்து கரம் கோர்த்து வரும் அனைவருக்கும் நன்றியும், மகிழ்ச்சியும்.
என்றென்றும் அன்புடன்,
தமிழ்க்குடில்

November 27, 2015

கட்டுரைப்போட்டி, சொற்பொழிவு போட்டி முடிவுகள்.

அன்புள்ளங்களுக்கு,
தமிழ்க்குடில் அறக்கட்டளை நிர்வாகியின் அன்பு வணக்கம்.
ஜூலை மாதம்’2015 மறைமலையடிகளாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்திய சொற்பொழிவு போட்டி மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்டுரைப்போட்டியின் முடிவுகளை தங்களிடம் பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.
போட்டியில் பங்குகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக்கொள்கிறோம். வெற்றிபெற்றவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை நிர்வாகத்தின் சார்பாகவும், நடுவர் மறை. தி. தாயுமானவன்(தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன்) அவர்களின் சார்பாகவும், நம் தமிழ்க்குடில் அங்கத்தினர்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
முடிவுகளை அறியும் முன்பு போட்டிகளின் வெற்றியாளர்களைத் தேர்வு செய்த நடுவர் அவர்களைப் பற்றி தங்களுக்காக சிலவரிகள்.
”உயர்திரு மறை. திரு. தாயுமானவன்” அவர்கள் தவத்திரு மறைமலையடிகளார் அவர்களின் பேரன் என்பதில் நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. இவர் நடுவனரசு பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தில்((Combat Vehicles Research Development Establishment Min-of-Defence ) பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ் மொழி நலன்களைமுதன்மையாகக் கொண்டு பாடுபடும் தமிழ்த்தொண்டர். அடிகளாரின் கொள்கைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டு எழுத்திலும், பேச்சிலும் தனித்தமிழை பயன்படுத்துபவர். ”மறைமலையடிகளாரின் நோக்கில்” உடல்நலம் என்னும் தலைப்பினை ஆய்வுப்பொருளாகக் கொண்டு ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர்(எம்.பில்) பட்டம் பெற்றுள்ளார். அடிகளாரது வாழ்வில் நடைபெற்றௌ இன்றியமையாத செய்திகள் கடிதங்கள் இவற்றை உள்ளடக்கி “தனித்தமிழ் இயக்கத்தந்தை மறைமலையடிகளார்” என்னும் நூலை எழுதியுள்ளார். இவரது சமூகப்பணி மற்றும் தமிழ்ப்பணிகளுக்கிடையில் நம் தமிழ்க்குடிலின் வேண்டுகோளை ஏற்று சிறந்த பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்து தந்தமைக்கு மனமார்ந்த நன்றியினை நிர்வாகம் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பரிசு பெற்றவர்கள் விவரம்
கட்டுரைப்போட்டிமுதல் பரிசு கி. மகாலட்சுமி - சேலம்
இரண்டாம் பரிசு ச. பொன்முத்து - சென்னை
மூன்றாம் பரிசு ’பரிவை’ சே. குமார்
மறைமலையடிகளார் சொற்பொழிவு போட்டிமுதல் பரிசு ஸ்டெல்லா தமிழரசி ர. - சென்னை
இரண்டாம் பரிசு ஸ்ரீ வித்யா - சென்னை
தமிழ்க்குடிலின் தொடர்ந்த செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் வழங்கிட வேண்டுகிறோம். டிசம்பர் மாதம் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு கவிதைப்போட்டி நடைபெறவுள்ளது. அனைவரும் பங்குகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். விவரம் விரைவில் தெரியப்படுத்தவிருக்கிறோம். நன்றி
என்றென்றும் அன்புடன் தமிழ்க்குடில்

November 03, 2015

ஆண்டு அறிக்கை 2014-2015

ஆண்டு அறிக்கை 2014-2015


தமிழ்க்குடில் அறக்கட்டளையின் (2014-2015) ஆண்டு நிதியறிக்கை:

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் மூன்றாமாண்டு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்நம் தமிழ்க்குடிலின் தொடர்ந்த பயணத்தில், முழுமையான ஒத்துழைப்பு வழங்கியும், உற்சாகமூட்டியும் நட்புகள் வழங்கிவரும் பேராதரவுடன் குடில் தனது பயணத்தில் அடுத்தகட்ட அறப்பணியை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கிறது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் தேவையான உதவிகளை எந்த நேரத்திலும் சிரமம் பாராமல் வழங்கிக்கொண்டிருக்கும்  அன்புத்தோழமைகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நவில்கின்றோம்தமிழ்க்குடில் சிறப்பாக செயலாற்றிட அடிப்படையாக தோழமைகளின் அயராத உழைப்பும், பங்களிப்பும், ஒத்துழைப்பும் மட்டுமே பேருதவியாக இருக்கிறது என்பதை மட்டற்ற பெருமகிழ்வுடனும், நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்

அறப்பணியில் தமிழ்க்குடில்:

இயற்கை விவசாயம்:

இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறைகளிடத்தில் சென்றடையச் செய்வதற்காக விழிப்புணர்வு கருத்தரங்கை ஏப்ரல்’2014 சிலம்பூர் கிராமத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தியது.  

கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள்:

*                   2014 மே மாதம்                  - அன்னையர் தினத்தை முன்னிட்டு 
                                                        பெண்களுக்கான சிறப்பு கட்டுரை போட்டி

*                   2014 ஜூலை மாதம்            - காமராஜர் அவர்களின் பிறந்தநாளை   
                                                         முன்னிட்டு கட்டுரை போட்டி

*                   2014 டிசம்பர் மாதம்            - மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளை  
                                                       முன்னிட்டு கவிதைபோட்டி நடத்தப்பட்டது.

போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த முதல் மூன்று படைப்பாளிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதல் பரிசாக ரொக்கப்பரிசுடன் சான்றிதழ் இரண்டாம் பரிசாக தமிழ்க்குடிலின் நினைவுப்பரிசுடன் சான்றிதழும், மூன்றாம் பரிசாக நூலுடன் சான்றிதழும் வழங்கப்பட்டது.

தமிழரின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்: 

மண்ணின் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக   தமிழரின் பாரம்பரியவிளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்க்குடில் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவருகிறது

2015 ஆம் ஆண்டு தமிழர் திருநாளையொட்டி விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்ட விவரங்கள்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மார்ட்டினார் ஆங்கிலவழி தனியார் நடுநிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்களுக்கு 14.01.15 அன்று போட்டிகள் நடத்தப்பட்டு 75 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டம் புதுக்காடு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 16.01.15 அன்று போட்டிகள் நடத்தப்பட்டு (17.01.15) அன்று 31 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

தஞ்சை மாவட்டம் புனல்வாசல் கிராமத்தில்  17.01.15 அன்று போட்டிகள் நடத்தப்பட்டு 26.01.15 அன்று தமிழ்க்குடில் சார்பாக 38 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  

தஞ்சை மாவட்டம்: தஞ்சை மாவட்டம், பாலத்தளி கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முப்பெரும் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டுப்போட்டிகள், இலக்கியபோட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்க்குடில் அறக்கட்டளை 56 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கியது.

நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்: 
1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் - ஓட்டப்பந்தயம், நீளம்   தாண்டுதல்,கபடி.
2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் - கோலாட்டம், கும்மி, இசை   நாற்காலி.
3. அறிவுசார்ந்த விளையாட்டுகள் - சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம்,கண்ணாமூச்சி. 
4. ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள் - நடித்துக்காட்டுதல், ஒப்புவித்தல்,பொருட்களை அடையாளம் காணுதல்.


தமிழ்க்குடில் அறக்கட்டளையின் (2014-2015) ஆண்டு நிதியறிக்கை:

                                      தமிழ்க்குடில் அறக்கட்டளை


                 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை விகித அறிக்கை


. எண்

விவரங்கள்
ரூ.
செலவு விகிதம் 100%
1
ஓராண்டு உள்வரவுகள்



ரொக்க இருப்பு:
கையிருப்பு: 1402.03
வங்கி இருப்பு: 44463.45

45865.48


நன்கொடை உள்வரவு
42701.00


கடன் ரொக்க உள்வரவு
1850.00


தொண்டு முதல் நிதி
0.00



90416.48






ஓராண்டு செலவுகள்
54578.02
60.36%




                 
                        உட்பிரிவுகளின் அடிப்படையில் விகிதம்







எழுதுபொருள் செலவுகள்
1025.00
1.88%

அஞ்சலகச்செலவுகள்
455.00
0.83%

பயணச்செலவுகள்
2696.00
4.94%

பணியாளர் நலன் செலவுகள்
1707.00
3.13%

சேவைக்கட்டணம்
3371.00
6.18%

அறப்பணி செலவுகள்
19580.00
35.88%

எரிபொருள்
200.00
0.37%

இதர செலவுகள்
4050.00
7.42%

மின்சாதனப்பொருட்கள்
2750.00
5.04%

வாடகை
300.00
0.55%

வங்கிக்கட்டணம்
920.02
1.69%

காயத்ரிக்கு கடன் திருப்பி செலுத்திய விதத்தில்
10024.00
18.37%

திரு.ரமேசுக்கு கடன் திருப்பி செலுத்திய விதத்தில்
7500.00
13.74%


54578.02
100.00%

ஆண்டு இறுதி கையிருப்பு



ரொக்கம் கையிருப்பு
2745.03


வங்கி இருப்பு
33093.43




   35838.46






இடம்: சிலம்பூர்                                                                                                                           
தேதி:   15.09.15                                                                                               





நன்றியுரை:

தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும் நல்லிதயம் கொண்ட தோழமைகளுக்கும், இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்கி நமது இலட்சியப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் அன்பு உள்ளங்களுக்கும் தமிழ்க்குடிலின் சார்பில்
அறங்காவலர்களின் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
தொடரும் ஆண்டுகளிலும் உங்களின் நட்பும், ஆதரவும் நமது சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறோம்.


தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக,

நிர்வாகிகள்.