November 25, 2014

மகாகவி பாரதியின் 132 வது பிறந்தநாள் விழா போட்டி

மகாகவி பாரதியின் 132 வது பிறந்தநாள் விழா போட்டி 

அன்புத் தோழமைகளுக்கு தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மகாகவி பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்க்குடில் அறக்கட்டளை  நடத்தும்கவிதை, கட்டுரை, பெண்களுக்கான சிறப்பு கட்டுரை மற்றும் வரலாற்று கட்டுரை போட்டிகளின் விவரங்களைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கவிதை போட்டி:

1.   தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும் கவிதைக்குப் பெயரிட்டு அனுப்பலாம்.
2.   கவிதையின் தன்மை: தங்களால் எழுதப்படும் கவிதை எந்தவகையினைச் சார்ந்தது என குறிப்பிடவும். (.ம்) புதுக்கவிதை, மரபுக்கவிதை,
3.   20  வரிகளுக்குக் குறையாமலும் 50 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
4.   கவிதை வேறு எந்த போட்டிக்கோ, இதழுக்கோ அனுப்பப்பட்டதாகவோ அல்லது வேறு எங்கும் பதிவிடப்பட்டதாகவோ இல்லாமல்தமிழ்க்குடிலின் இந்தப்போட்டிக்காக மட்டுமே பிரத்தியேகமாக எழுதப்பட்டவையாக இருக்கவேண்டும்.
5.   ஒரு கவிஞர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பவேண்டும்.
6.   உங்களுடைய சொந்த படைப்பாக இருக்கவேண்டும்.

கட்டுரைப் போட்டி:

1.   காமராசரை முதலமைச்சராக பெறாத தமிழ்நாடு

2.   என் வாழ்வில் பெண் என்பவள். . .

3.   உலகியலில் தமிழர் நாகரீகம் ஓங்கியது எங்ஙனம்..?

4.   எனது பார்வையில் தொல்காப்பிய தமிழ்

5.   உலகக்கலைகளும், பாரதக் கலைகளும்.(ஓர் ஒப்பீடு)

6.   தமிழகத்தில் அகத்தியலில் ஆணும், புறத்தியலில் பெண்ணும்.

7.   போபர்ஸ் முதல் அலைக்கற்றை வரை.

விதிமுறைகள்: 3 முதல் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
தமிழ்க்குடில் வழங்கிய தலைப்புகள் அல்லாது தங்களுக்கு விருப்பமான தலைப்பிலும் கட்டுரை எழுதலாம்.

சிறப்பு கட்டுரைப்போட்டிபெண்களுக்கு மட்டும்

*** பெண்கள் மட்டும் பங்குகொள்ள வேண்டும்.***
தமிழ்க்குடில் வழங்கியிருக்கும் தலைப்புகளில் தங்கள் சிந்தனையில் 3 பக்கங்களுக்குக் குறையாது கட்டுரை வடித்து அனுப்பவும்.

1.   தாய்மை
2.   பெண்மை
3.   நான் படைக்க விரும்பும் சமூகம்
4.   உயிரியல் பரிணாமத்தில் பெண்பாலினத்தின் பங்கு.
5.   வயல் வெளியிலிருந்து வான்வெளி நோக்கி..(பெண்கள்)
6.   பெண் விரும்பும் ஆணின் பரிணாமம் - காதலன், கணவன், மகன்…?
7.   பாரதி தேடிய புதுமைப்பெண்ணாய் நான்
குறிப்பு: கவிதை, கட்டுரை மற்றும் பெண்களுக்கான சிறப்பு கட்டுரைகள் தமிழ்க்குடிலின் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வரலாற்று கட்டுரைப்போட்டி:

தென்னிந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு தொடர்புடைய தமிழனின் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகமெங்கும் அறியச்செய்யும்  எண்ணத்தில் இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை வெளிக்கொணரும் ஒரு புதிய முயற்சி.

தாங்கள் வாழும் பகுதி அல்லது தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் கிடைக்கக்கூடிய அரிய தகவல்கள், அடையாளச்சின்னங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றை இணைத்து புகைப்படத்துடன் கூடிய கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.

சங்ககாலம், மூவேந்தர் காலம் மற்றும் அதற்குப்பின்னான காலங்களில் செவிவழிச்செய்தி, கதைகள் மற்றும் வெளிக்கொணரப்படாத வரலாற்று உண்மைகள் சார்ந்த, ஏதேனும் ஒரு களத்தை எடுத்துக்கொண்டு இதுவரை வெளிவராத வரலாற்று உண்மைகளை அதற்கான சான்றுகளுடன் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முக்கியக்குறிப்பு: தாங்கள் திரட்டியனுப்புகிற தகவல்கள் ஏற்கனவே வெளிக்கொணரப்பட்ட தகவலாகவோ, இணையத்தில் கிடைக்கக்கூடிய தகவலாகவோ இருக்கும்பட்சத்தில் பரிசுக்கு தகுதியற்றதாக கருதப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

      படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதி நாள் 07.12.14
படைப்புகள் tamilkkudil@gmail.com என்ற மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பிவைக்கப்படவேண்டும். குழுமத்திலோ, நிர்வாகியின் தனிச்செய்தியிலோ தனித்த மின்னஞ்சலிலோ அனுப்பப்படும் படைப்புகள் போட்டிக்கு ஏற்கப்படமாட்டாது. முடிவுகள் அறிவிக்கப்பட்டபிறகு பதிவுகள் தமிழ்க்குடில் குழுமத்திலும், வலைப்பூவிலும் பகிரப்படும்

போட்டியின் முடிவு பாரதியின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும்.

பரிசு விவரங்கள்:
1.   வரலாற்று கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு:               ரூ.3000/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு: ரூ.1500/- மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்                              
மூன்றாவது பரிசு:        தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

பரிசுத்தொகை என்பதை உங்கள் உழைப்பிற்கான எங்களுடைய சிறு அன்பளிப்பாக மட்டுமே கருதவேண்டுகிறோம்தங்களுடைய உழைப்பிற்கும், அறிவாற்றலுக்கும் முன்னால் இந்த பரிசுத்தொகை ஈடாகாது என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். ஆயினும், மறைந்துகிடக்கும் நம் வரலாறுகள் நம் மக்களிடையே சென்றடையவேண்டும் என்ற ஆர்வத்திலும், அக்கரையிலும் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம். இந்த முயற்சியில் உங்கள் அனைவரது முழு ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் மட்டுமே நம் வரலாறுகளை மீட்டெடுக்கமுடியும்  என்கிற நம்பிக்கையை உங்கள் முன் வைக்கிறோம். நம் சமூகத்திற்கு நாம் செய்கிற சேவை என்கிற தார்மீக பொறுப்பின் அடிப்படையில்
வரலாற்று ஆய்வாளர்களும், வல்லுநர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவேற்கிறோம்.

2.   கவிதைப்போட்டி:

முதல் பரிசு:          ரூ.1000/மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு          
                          மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
3.   கட்டுரைப்போட்டி:
முதல் பரிசு:          ரூ.1000/மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு                                   
                          மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
     
4.   பெண்கள் சிறப்புக்கட்டுரை
முதல் பரிசு:          ரூ.1500/மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு:    தமிழ்க்குடில் வழங்கும் சிறப்பு பரிசு                                  
                    மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு:       நூல் மற்றும் தமிழ்க்குடில் வழங்கும் சான்றிதழ்.

இதை போட்டி என்று மட்டுமே எண்ணாமல், நமது தனித்திறமைகளை வெளிக்கொணரும் ஒரு முயற்சியாகவும், பயிற்சியாகவும் கொள்ள வேண்டுகிறோம்.
நம் தாய்மொழிக்கும், நம்முடைய அடுத்த தலைமுறைக்கும் நாம் ஆற்றும் கடமையில் ஒன்றென்பதை உணர்வோமாக.
அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

என்றும் உங்களுடன்,
-தமிழ்க்குடில்.








November 22, 2014

ஆண்டு அறிக்கை - 2013 - 2014

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் (2013-2014) ஆண்டு நிதியறிக்கை: 

தமிழ்க்குடில் அறக்கட்டளையின் இரண்டாமாண்டு அறிக்கையை உங்கள் முன் சமர்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். தொடரும் நமது பயணத்தில் தொடர்ந்து முழுமையான ஒத்துழைப்பு நல்கி, பேராதரவுடன் நட்புகள் வழங்கிவரும் உற்சாகத்துடன் குடில் தனது பயணத்தில் அடுத்தகட்ட அறப்பணியை நோக்கி பயணிக்கிறது என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். நம்முடைய அனைத்து முயற்சிகளுக்கும் தேவையான உதவிகளை எந்த நேரத்திலும் சிரமம் பாராமல் வழங்கி கொண்டிருக்கும் அன்புத்தோழமைகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நவில்கின்றோம். தமிழ்க்குடில் சிறப்பாக செயலாற்றிட அடிப்படையாக தோழமைகளின் அயராத உழைப்பும், பங்களிப்பும், ஒத்துழைப்பும் மட்டுமே பேருதவியாக இருக்கிறது என்பதை மட்டற்ற பெருமகிழ்வுடனும், நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறப்பணியில் தமிழ்க்குடில்:
நூலகம் திறப்பு:
தமிழ்க்குடில் அறக்கட்டளையால் சென்ற ஆண்டு கட்டப்பணித் துவங்கப்பட்டு, இந்த ஆண்டில் முழுமை பெற்றதும், அதன் திறப்புவிழா ஏற்பாடு செய்யப்பட்டு, 2013 செப்டம்பர் திங்கள் 9ம் நாள் அன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் விபரம் பின்வருமாறு:
09-09-2013 திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி வைரம் ராமமூர்த்தி அவர்கள் திருக்கரங்களினால் குத்துவிளக்கு ஏற்றப்பட அதனைத் தொடர்ந்து பேராசிரியர் உயர்திரு.க. இராமசாமி (முதுநிலை ஆய்வறிஞர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை) அவர்கள், எழுத்தாளர் திரு.இமையம் அவர்கள், சிலம்பூர் கிராம ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.இரா.இளையபெருமாள் அவர்கள் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தனர். சிலம்பூர் கிராம பள்ளிக்குழந்தைகள் இறைவணக்கமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

தமிழ்க்குடிலின் அங்கத்தினரான திரு.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். சிலம்பூர் கிராம ஊராட்சி மன்றத்தலைவர் திரு.இரா. இளையபெருமாள் அவர்கள் சிறப்புவிருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

   பொன்பரப்பி கிராமத்தில் பிறந்து அழகாபுரம் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனத்தில்பேராசிரியராக. 28.5 ஆண்டுகள் பணியாற்றி, செம்மொழி திட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசாங்கத்தின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தலைவராக இருந்து பொறுப்பு அலுவலராக ஓய்வுப்பெற்று  தற்போது அதே நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராக பணியாற்றி வரும் பேராசிரியர் உயர்திரு.க.இராமசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அடுத்ததாக, தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அறங்காவல் தலைவர்  கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் அவர்கள் தமிழ்க்குடில் அறிமுகம் மற்றும் தமிழ்க்குடில் கடந்துவந்த பாதை பற்றி விளக்கினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் திரு. க. இராமசாமி அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது.

கோவேறுக் கழுதைகள்  கதை மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகி, பிறகு தனது பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் மூலம் இலக்கியத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து பல விருதுகளை தனதாக்கி கொண்ட  எழுத்தாளர் திரு. இமையம்  அவர்கள் சிறப்புவிருந்தினர் உரையாற்றினார்.

அடுத்ததாக, தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர் அவர்களின் சிந்தனை உளி கொண்டு அன்புள்ளங்கள் அனைவரின் உதவியோடு செதுக்கப்பட்ட நூலகசிற்பத்தினை பேராசிரியர் திரு.க.இராமசாமி அவர்கள் திறந்துவைத்து உயிரூட்டினார். தோழமைகள் மற்றும் நம் தமிழ்க்குடிலின் அன்புள்ளங்கள் அனைவரது  வாழ்த்துகள் இந்த நூலகத்திற்கு சக்தியூட்டும் விதமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இனிதே துவக்கப்பட்டது.

நூலகத்திறப்பினை தொடர்ந்து திரு.இமையம் அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அலுவலகத்தை திறந்துவைத்ததோடு, தமிழ்க்குடில் நூலகத்திற்கு நூல்களும் வழங்கினார்.

பேராசிரியர் திரு.க.இராமசாமி அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையினை வெளியிட, எழுத்தாளர் திரு.இமையம் அவர்கள் பெற்றுக்கொண்டார். 

கிரீன் விசன் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தை சார்ந்த சகோதரர் மகேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சிறப்புவிருந்தினர்களுக்கு, நம் அறக்கட்டளையின் தலைவர்.கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார். பள்ளிக்குழந்தைகள் தேசியகீதம் பாட விழா இனிதே நிறைவுற்றது.           

தமிழரின் பாரம்பரிய விளையாட்டு போட்டி:
இந்திய மண்ணில் பெருகிவரும் மேலைநாட்டு மோகத்தால், அழிந்து கொண்டிருக்கும் நமது மண்ணின் பாரம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக நமது பள்ளிக்குழந்தைகளுக்கு தமிழரின் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என முடிவு செய்து, முதற்கட்டமாக சிலம்பூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கிடையே நமது பாரம்பரிய விளையாட்டு பயிற்சி சுமார் 2 மாதம் அளித்து பின் விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. அதன் விபரம் வருமாறு:
அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் 25.01.14, 26.01.14 மற்றும் 27.01.14 (சனி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில்) ஆகிய மூன்று நாட்களும் கீழ்க்கண்ட போட்டிகளை தமிழ்க்குடில் நடத்தியது.  அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்: 
1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் - ஓட்டப்பந்தயம், நீளம்   தாண்டுதல், கபடி.
2.
மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் - கோலாட்டம், கும்மி, இசை    நாற்காலி.
3. அறிவுசார்ந்த விளையாட்டுகள் - சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம், கண்ணாமூச்சி. 
4.
ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள் - நடித்துக்காட்டுதல், ஒப்புவித்தல், பொருட்களை அடையாளம் காணுதல்.
விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கியதோடு, கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசும், கலந்துகொண்டமைக்கான சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

தமிழ்க்குடில் அறக்கட்டளை
2013 - 2014 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை விகித அறிக்கை
வ. எண்
விவரங்கள்
ரூ.
செலவு விகிதம் 100%
1
ஓராண்டு உள்வரவுகள்



ரொக்க கையிருப்பு:
கையிருப்பு: 215.00  மற்றும்  வங்கி இருப்பு:37565.44
37780.44


நன்கொடை உள்வரவு
200374.00

கடன் ரொக்க உள்வரவு
8174.00


ஓராண்டு மொத்த உள்வரவு
246328.44


ஓராண்டு செலவுகள்
200462.96

உட்பிரிவுகளின் அடிப்படையில் செலவு விகிதம்



எழுதுபொருள் செலவுகள்
3777.00
1.88 %

அஞ்சலகச்செலவுகள்
2968.00
1.48 %

பயணச்செலவுகள்
3015.00
1.50 %

பணியாளர் நலன் செலவுகள்
237.00
0.12 %

சேவைக்கட்டணம்
3000.00
1.50 %

அறப்பணி செலவுகள்
6067.00
3.02 %

எரிபொருள்
2550.00
1.27 %

இதர செலவுகள் (நூலகத்திறப்பு விழா செலவுகள்)
21297.00
10.63 %

வங்கிக்கட்டணம்
1614.96
0.80 %

அறைகலன்
300.00
0.15 %

மின்சாதனப்பொருட்கள்
5000.00
2.51 %

நூலக கட்டிட செலவுகள்
110637.00
55.20 %

கடன் திருப்பி செலுத்தியது
40000.00
19.96 %

ஆண்டு இறுதி கையிருப்பு



ரொக்கம் கையிருப்பு
1402.03


வங்கி இருப்பு
44463.45



45865.48


நன்றியுரை:
தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தங்களை இணைத்துக்கொண்டு தொடர்ந்து எங்களுடன் பயணிக்கும் நல்லிதயம் கொண்ட தோழமைகளுக்கும், இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்கி நமது இலட்சியப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்து வரும் அன்பு உள்ளங்களுக்கும் தமிழ்க்குடிலின் சார்பில் அறங்காவலர்களின் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
தொடரும் ஆண்டுகளிலும் உங்களின் நட்பும், ஆதரவும் நமது சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறோம்.

தமிழ்க்குடில் அறக்கட்டளைக்காக,

நிர்வாகிகள்.