September 09, 2013

தமிழ்க்குடில் அறக்கட்டளை பொதுநூலக திறப்புவிழா - ஒரு பார்வை

அன்புத்தோழமைகளுக்கு வணக்கம்._/\_


தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைமையலுவலகம் அமைந்திருக்கும், அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் தமிழ்க்குடில் அறக்கட்டளை தோற்றுவித்திருக்கும் இணையவசதியுடன் கூடிய பொதுநூலகத்தின் திறப்புவிழா இன்று 09-09-13 திங்கள்கிழமை தங்கள் அனைவரது வாழ்த்துகளினாலும் இனிதே நடந்தேறியது.நூலகத்திறப்புவிழா பற்றிய சிறு தொகுப்பு தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

காலை 10.30 மணிக்கு தமிழ்க்குடில் அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி வைரம் ராமமூர்த்தி அவர்கள் திருக்கரங்களினால் குத்துவிளக்கு ஏற்றப்பட அதனைத் தொடர்ந்து பேராசிரியர் உயர்திரு.க. இராமசாமி (முதுநிலை ஆய்வறிஞர், செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை) அவர்கள், எழுத்தாளர் இமயம் அவர்கள், சிலம்பூர் கிராம ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.இரா.இளையபெருமாள் அவர்கள் மற்றும் திருமதி.சீதாலட்சுமி அவர்கள் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தனர்.

சிலம்பூர் கிராம பள்ளிக்குழந்தைகள் இறைவணக்கமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
 
தமிழ்க்குடிலின் அங்கத்தினரான திரு.ராமச்சந்திரன் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். 
சிலம்பூர் கிராம ஊராட்சி மன்றத்தலைவர் திரு.இரா. இளையபெருமாள் அவர்கள் சிறப்புவிருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பொன்பரத்தி கிராமத்தில் பிறந்து அழகாபுரம் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி “இந்திய மொழிகளின் நடுவன் நிறுவனத்தில்” பேராசிரியராக. 28.5 ஆண்டுகள் பணியாற்றி, செம்மொழி திட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசாங்கத்தின் “செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தலைவராக இருந்து பொறுப்பு அலுவலராக ஓய்வுப்பெற்று  தற்போது அதே நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிகராக பணியாற்றி வரும் பேராசிரியர் உயர்திரு.க.இராமசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அடுத்ததாக, தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அறங்காவல் தலைவர்(சேர்மன்) கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் அவர்கள் தமிழ்க்குடில் அறிமுகம் மற்றும் தமிழ்க்குடில் கடந்துவந்த பாதை பற்றி விளக்கினார்.
அவரைத்தொடர்ந்து பேராசிரியர் திரு. க. இராமசாமி அவர்களின் சிறப்பு உரை இடம்பெற்றது.

கோவேறுக் கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகி பிறகு தனது பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள் மற்றும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் மூலம் இலக்கியத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து பல விருதுகளை தனதாக்கி கொண்ட எழுத்தாளர் திரு. இமையம் அவர்கள் சிறப்புவிருந்தினர் உரையாற்றினார்.
அடுத்ததாக, தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தலைவர் அவர்களின் சிந்தனை உளி கொண்டு அன்புள்ளங்கள் அனைவரின் உதவியோடு செதுக்கப்பட்ட நூலகசிற்பத்தினை பேராசிரியர் திரு.க.இராமசாமி அவர்கள் திறந்துவைத்து உயிரூட்டினார்.தோழமைகள் மற்றும் நம் தமிழ்க்குடிலின் அன்புள்ளங்கள் அனைவரது  வாழ்த்துகள் இந்த நூலகத்திற்கு சக்தியூட்டும் விதமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இனிதே துவக்கப்பட்டது.
நூலகத்திறப்பினைத் தொடர்ந்து எழுத்தாளர் திரு.இமையம் அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் அலுவலகத்தைத் திறந்துவைத்ததோடு, தமிழ்க்குடில் நூலகத்திற்கு நூல்களும் வழங்கினார்.

பேராசிரியர் திரு.க.இராமசாமி அவர்கள் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையினை வெளியிட, எழுத்தாளர் திரு.இமையம் அவர்கள் பெற்றுக்கொண்டார். 
விழா துணைத்தலைவர் சிலம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு.இரா.இளையபெருமாள் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழந்தைகளுக்கு, தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக பரிசுப்பொருட்கள் வழங்கி குழந்தைகளை ஊக்குவித்தனர்.
க்ரீன் விசன் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தைஅ சார்ந்த சகோதரர் மகேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சிறப்புவிருந்தினர்களுக்கு, நம் அறக்கட்டளையின் தலைவர்.கவிஞர்.திரு.தமிழ்க்காதலன் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார். பள்ளிக்குழந்தைகள் தேசியகீதம் பாட விழா இனிதே நிறைவுற்றது...!!
தமிழ்க்குடில் நூலகத்திறப்புவிழாவிற்கு அழைப்பிதழ் முதல் அனைத்து அச்சு உதவிகளையும் வழங்கிய தோழர் த.ஆனந்த் மற்றும் சகோதரர் த.ஜெயசீலன் அவர்களுக்கும், விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்து தமது நேரத்தையும், உழைப்பையும் வழங்கி, நூல்கள் ஒழுங்குபடுத்துவது மற்றும் திறப்புவிழாத் தொடர்பான அனைத்து செயல்பாடுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட சகோதரர்.கார்த்திகேயன், சகோதர்.பாலாஜி, தோழி.திருமதி. சீதாலட்சுமி, சகோதரர் தாமோதரன் விஷ்வகர்மா, சகோதரர் ராமச்சந்திரன் மற்றும் சகோதரர் மகேந்திரன் இவர்களின் அர்பணிப்பான பணிக்கு   நன்றி என்ற வார்த்தை போதுமானதல்ல என்றாலும்,  தமிழ்க்குடில் அங்கத்தினர்கள் சார்பாகவும், அறங்காவலர்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். 

தமிழ்க்குடில் பூச்சரத்தில் இணைந்திருந்து மணம்வீசி, சரத்தை அழகு படுத்திவரும் மலர்களாய், தமிழ்க்குடில் நூலகம் அமைப்பதற்கும் மற்றும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் ஒவ்வொரு செயல் பாடுகளிலும் தமது பங்களிப்பினை வழங்கி பெரிதும் உறுதுணையாக இருந்துவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் தமிழ்க்குடில் அங்கத்தினர்கள் சார்பாகவும், அறக்கட்டளையின் அறங்காவலர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினைக் காணிக்கையாக்குகின்றோம். தோழமைகள் அனைவரும் நம் அறக்கட்டளையின் சேவைப்பயணத்தில் தங்களது தொடர்ந்த ஒத்துழைப்பினை வழங்கி கரம்கோர்த்து உடன் பயணிக்க அன்புடன் வேண்டுகிறோம். _/\_